மதுரை தினகரன் ஊழியர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி




கருணாநிதியின் குடும்ப சண்டையின் காரணமாக மதுரையில் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு இன்றோடு இரு ஆண்டு நிறைவடைகிறது. 2007ம் ஆண்டில் இதே தினத்தில் கொழுந்துவிட்டு எரிந்து சூழ்ந்த நெருப்பில் தனது இறுதி நிமிடங்களை நரக வேதனையுடன் அனுபவித்து தோல் தீய, நரம்புகள் வெடிக்க, கரிக்கட்டையாய் உதிர்ந்து போன அந்த மூன்று உயிர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது தமிழக மக்களின் கடமையாகும்.


தேர்தல் நேரம், கருத்துக்கணிப்புக் காலம் என்பதால் அந்த கருத்துக் கணிப்பை மறந்துவிடக்கூடாது என்று நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். மதுரையில் தனது ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பும் அண்ணனுக்கு (அவருக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பெயரும் உள்ளதாம். போங்கடாங்க...) எதிராக கருத்துக்கணிப்பை வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்தை கொலைவெறியுடன் தாக்கிய, மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்திய அந்த நரவேட்டை மிருகங்கள் இன்று அண்ணனுக்கு தேர்தல் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் அண்ணன் வாகனத்தில் சிரித்தபடி கையசைத்துச் செல்கின்றனர். அண்ணனும் புன்னகை சிந்தும் முகத்துடன் வாக்குகளை சேகரித்துக்கொண்டிருக்கிறார்.


ஆனால் தங்களது குடும்பங்களில் வருமானத்திற்கு ஆதரவாக இருந்த ஒரு ஜீவனை இழந்த அந்த குடும்பங்கள் சோகங்களை நெஞ்சில் சுமந்து மௌனமாக அழுதுக்கொண்டு இருக்கிறார்கள். கொலை மற்றும் கலவர குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட மதுரை நகரின் மேயர் தேன்மொழி, அவரது கணவர் கோபிநாதன் மற்றும் பி.பிரபு, எம்.சரவணன், கே.மாரி, பி.இருளாண்டி உள்ளிட்டவர்கள் இப்போது எங்கே, எப்படி சுபிட்சமாக உள்ளனர் என்று மதுரை நகர மக்கள் மட்டுமல்ல அனைவரும் அறிவர். தங்கள் குடும்பத்தில் எழுந்த அதிகார போட்டியின் வெறியை தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு மூன்று உயிர்கள் தேவைப்பட்டுள்ளது.


தினகரன் பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு, உள்ளே ஊழியர்கள் இருக்கும் போதே கொளுத்தப்பட்டு மரண ஓலம் அடங்கிய போது அங்கு வந்த கலாநிதிமாறன் இதை சும்மாவிடப்போவதில்லை என்று சபதமிட்டார். அப்போது யாரும் நினைக்கவில்லை, அது வெற்று வார்த்தைகளாக காற்றில் கரையும் என்றும், நிறம் மாறுமென்றும். அதன் பிறகு தயாநிதி மாறனின் பதவி போனதும் சற்று கோபம் அதிகமானது. அதன் விளைவு சன் தொலைக்காட்சியில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் தலைகாட்டத் துவங்கினர். தினகரன் பத்திரிகையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் படங்களும் பேட்டியும் வரத்தொடங்கியது.


1990ல் துவங்கிய டீவி ராஜ்ஜியம் மெல்ல மெல்ல தனது வலையை விரித்து இன்று சன் நியூஸ், கிரன் நியூஸ், உதயா நியூஸ், ஜெமினி நியூஸ், சன் மியூசிக், உதயா மியூசிக், ஜெமினி மியூசிக், உதயா கேபிள் விஷன், சுட்டி டீவி, கே டீவி, ஆதித்தியா டீவி, தேஜா டீவி, சூர்யா டீவி, ஜெமினி டீவி, உதயா டீவி, சிந்து டீவி, குஷி டீவி, கிரன் டீவி, உதயா வர்தகளு, உதயா மூவிஸ் போன்ற 22 தொலைகாட்சி சேனல்களும், சூரியன் எப்.எம் போல நாற்பதுக்கும் மேற்பட்ட பண்பலை அலைவரிசைகளையும் கொண்டு பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது அதை சமாளிக்க வேண்டுமெனில் ஆளும் கட்சிக்கு பலமான ஊடக பலம் தேவைப்பட்டது.


எனவே உடன் கலைஞர் டீவி துவக்கப்பட்டது. சன் டீவி நிர்வாகத்தில் உள்ள பலர் மிரட்டப்பட்டு அல்லது அன்பாக கவனிக்கப்பட்டு கலைஞர் டீவி நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பலநிகழ்ச்சிகள் சன் டீவியிலிருந்து கலைஞர் டீவிக்கு மாற்றப்பட்டது. சிரிப்பு நிகழ்ச்சி கலைஞர்கள் மிரட்டப்பட்டடு கண்ணீருடன் கலைஞர் டீவியில் இணைந்தனர். தினகரனுக்கு எதிராக எதிரொலி என்ற பத்திரிக்கை முளைத்து வந்தது. சுமங்களி கேபிள் நிறுவனத்திற்கு எதிராக அரசு கேபிள் விஷன் துவக்கப்பட்டது, மதுரையில் அண்ணன் ராயல் கேபிள் விஷனை துவக்கினார்.


அவரது அடிப்பொடிகள் தங்களிடமே தொடர்புகளை பெறவேண்டுமென கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டினர் அல்லது உதைத்தனர். சன்னுக்கு எதிராக முழுமையான போராட்டத்தை அண்ணன் அழகிரி துவங்கிட மதுரை மண்டலத்தில் சன் தெரியாமல் போனது. அதே நேரம் அண்ணா அறிவாலயத்திலிருந்தும் சன் நிறுவனம் துரத்தப்பட்டது.


ஆட்சி அதிகாரம், பணபலத்தால் நெருக்கடி அதிகமாகன நேரத்தில்தான் தினகரனுக்கு மத்திய மந்திரி ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் உதவிக்கரம் நீட்டினார்.


இந்திய நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை நட்டப்படுத்தி கோடி கோடியாய் கொள்ளையடித்த, தொலைத்தொடர்புத்துறையில் ஸ்பெக்ட்ரம் என்ற பூதத்தை தினகரன் கையில் எடுத்ததும் கலைஞர் தரப்பு கொஞ்சம் அடக்கி வாசிக்கத்துவங்கியது. தினம் தினம் தினகரன் நாளிதழில் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக விபரங்கள் பக்கம் பக்கமாக வரத்தொடங்கியது. இந்த தகவல் மத்திய அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.


இதற்கிடையில் தாத்தாவை பார்க்க பேரன்கள் அழைக்கப்பட்டனர். கலாநிதி மற்றும் தயாநிதி என்ற பேரன்கள் கருணாநிதி என்ற தாத்தாவை பார்க்கும் போகும்போது, ஸ்டாலின் மற்றும் அழகிரி என்ற மாமாக்களும் உடன் இருந்தனர். பிரிந்தவர்கள் சேர்ந்தனர். அவர் கண்ணீர் சிந்த, இவர் அதை துடைக்க, பலகோடி தமிழ்மக்கள் இளித்த வாயர்களாக மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டனர். குடும்பத்துடன் அனைவரும் சிரித்தபடி பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். எங்களுக்குள் காற்று கூட நுழைய முடியாது என்று அண்ணன் அழகிரி தயாநிதி மாறனை கட்டிப்பிடித்து பேட்டி கொடுக்க இவர்களது நாடகத்திற்கு சுபம் போடப்பட்டது.


இதற்கிடையில் மற்றொரு காட்சியும் அரங்கேறியது. எம்.ஜி.ஆருக்கு எதிராக நடிகனாக களமிறக்கப்பட்டு மூக்குடைப்பட்ட மூத்த மகன் மு.க.முத்து வந்து ஒட்டிக்கொண்டார், அவரது மகன் உலக புகழ்பெற்ற (!!!!?) பாடகராக அடையாளப்படுத்தப்பட்டார். முக்கு முத்தான வைரமுத்துவும் முடிந்த அளவு தூது சென்று கல்லாக்கட்டினார்.


இந்த நாடகத்தால் கருனாநிதி குடும்பம் அடைந்த நன்மைகள் பல- புதிய சேனல்களும், பத்திரிகையும் துவக்கபட்டது.- ஸ்பெக்ட்ரம் லஞ்சம் பலருக்கு (அவர் குடும்பத்தினுள்தான்) பங்குபிரிக்கப்பட்டது.- டெல்லியை கவனிக்க கனிமொழியும் பதவியேற்றுக்கொண்டார். (கனிமொழி அம்மா எனக்கு சும்மா என்ற வசனம் உங்கள் நினைவுக்கு வந்தால் கட்டுரையாளர் பொறுப்பல்ல) - அண்ணன் அழகிரி அதிகார பலம் அதிகரித்தது.


தமிழக மக்கள் திடீரென ஏற்பட்ட இந்த பரபரப்பூட்டும் நாடக காட்சியை வழக்கம் போல சுவராசியமாக விவாதித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல தங்களது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு "கவர்" ஸ்டோரிகள் எழுதினர். ஆனால் இதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் பல கேள்விகள் நிச்சயம் எழும் என்பதை பலர் மறந்தே போனார்கள்.


- தனது தாத்தாவுடன் ஏற்பட்ட மோதலின் போது பக்கம் பக்கமாய் எழுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமான செய்தி திடீரென நின்று போனதன் காரணம் என்ன என்பதை தினகரன் மறைப்பது ஏன்?


- அண்ணனின் ராயல் கேபிள் விஷனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கேபிள் ஆப்ரேடர்களின் கதி என்ன?


- அரசு கேபிள் திட்டம் என்ன ஆனது என்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமா?


- தனது குடும்ப உறுப்பினர்களின் நலன் காக்கப்பட தினம் தினம் உழைக்கும் முதல்வர் மதுரையில் அண்ணனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?


- தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட மூன்று அப்பாவி ஊழியர்களின் குடும்பங்களின் கதி என்ன?


- அந்த ஊழியர்களின் குடும்பங்கள் கொடுத்த வழக்கு இனி என்னாகும்?


- பணம் இருப்பவர்கள் மோதிக்கொண்டால் இடையில் இருக்கும் சாதாரண மக்களின் கதி இனியும் இப்படிதான் ஆகுமா? கேள்விகள் நீண்டுகொண்டே போகிறது...


மதுரையில் போட்டியிடும் அண்ணன் இன்று கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து, தனது அதிகார எல்லையை இந்திய நாட்டின் தலைநகர் வரை கொண்டு செல்லத் துடிக்கிறார். மதுரை நகர மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?!

பிரகாஷ் காரத்தின் "மாஸ்டர் பிளான்'!

- சத்தீஷ் 

மூன்றாவது அணி என்பது மூன்றாவதாக வரும் அணி என்று பலராலும் பலமுறை எள்ளி நகையாடப்பட்டிருந்தாலும், 2009 மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மூன்றாவது அணிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்ட நாள்முதலே, மூன்றாவது அணிக்கான முயற்சியில் இறங்கிவிட்டார் அவர்.

  தில்லி ஹுமாயூன் சாலையிலுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் வீட்டிற்குப் போய் அவரைத் துணைக்கு அழைத்தது முதல், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கைகுலுக்கி பிஜு ஜனதா தளத்தை மூன்றாவது அணியில் இணைத்துக் கொண்டதுவரை பிரகாஷ் காரத் அசுர வேகத்தில் தனது பகடைக் காய்களை உருட்டி உருட்டி செயல்பட்டார். தேர்தல் முடிவுகளுக்குப்பின் இடதுசாரிகளின் விரலசைப்பில் மட்டும்தான் ஓர் அரசு அமைந்தாக வேண்டும் என்கிற நிலைமையை ஏற்படுத்துவதுதான் பிரகாஷ் காரத்தின் மாஸ்டர் பிளான்!

  பிரகாஷ் காரத் பிறந்தது பர்மாவின் (இன்றைய மியான்மர்) தலைநகரான ரங்கூனில் (இப்போது யங்கூன்). இவர் பிறந்த தேதி பிப்ரவரி 7, 1948 என்றாலும் அதிகாரபூர்வமான பிறந்த தேதி அக்டோபர் 19, 1947. பிரகாஷ் காரத்தின் தந்தை அன்றைய பிரிட்டிஷ் ரயில்வேயில் அதிகாரியாக இருந்தவர்.

  பள்ளியில் படிக்கும்போதே தனது தந்தையை இழந்த பிரகாஷும் தாயார் ராதாவும் சொந்த ஊரான கேரளத்துக்குப் போகாமல், தஞ்சமடைந்தது நமது தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதாரம் படித்த பிரகாஷ் காரத், பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் பெற்றதுடன் இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு உதவித் தொகையும் பெற்றார்.

  பிரகாஷ் காரத்தின் எடின்பர்க் பல்கலைக்கழக வாழ்க்கைதான் அவரை ஒரு பொதுவுடைமை சிந்தனையாளராக மாற்றியது. மார்க்ஸýம், ஏங்கல்ஸýம் பிரகாஷுக்கு அறிமுகமானது அங்குதான். 1970-ல் இந்தியாவுக்குத் திரும்பிய பிரகாஷ் காரத், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பைத் தொடர முற்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சம்மேளனத்தின் (எஸ்.எப்.ஐ.) நிறுவனத் தலைவர்களில் பிரகாஷ் காரத்தும் ஒருவர், தெரியுமா?

  எஸ்.எப்.ஐ.யின் தள நாயகர்களில் ஒருவராக இருந்த காலத்தில் கட்சித் தலைவராக இருந்த ஏ.கே. கோபாலனின் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு காரத்துக்குக் கிடைத்தது. அவசரநிலைச் சட்டப் பிரகடனமும், அதை எதிர்த்து நடந்த போராட்டமும், அவரைத் தலைமறைவு வாழ்க்கை வாழவும், காவல்துறையால் பிடிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உள்படுத்தியது. சுமார் ஒன்றரை வருடம் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தலைமறைவாக வாழ்ந்தவர் பிரகாஷ் காரத் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

  எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரகாஷ் காரத் மீண்டும் சென்னைவாசியானார். இந்த முறை அவர் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சிந்தனின் வலது கரமாகத் தொழிலாளர் பிரச்னைகளில் முழுநேர கவனமும் செலுத்த நேர்ந்தது. 1985-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் பார்வையில் பட்டார். அடுத்த சில வருடங்கள், ஈ.எம்.எஸ்.சின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட்டது காரத் தான் என்பது தில்லியிலுள்ள கட்சித் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவருக்கும் தெரியும்.

  பிரகாஷ் காரத் 1992-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ'வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்திய அரசியல் மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி பாபர் மசூதி இடிப்புப் பிரச்னைவரை, நாளும் பொழுதும் அன்றைய நரசிம்ம ராவ் அரசு தனது செல்வாக்கை இழந்து வந்த நேரம். பாஜகவும், இடதுசாரிகளும் நரசிம்ம ராவுக்குத் தந்து கொண்டிருந்த மறைமுக ஆதரவை விலக்கிக் கொண்ட நேரமும்கூட.

  ஈ.எம்.எஸ்.ஸýக்குப் பிறகு பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற ஹர்கிஷண்சிங் சுர்ஜித்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகப் பிரகாஷ் காரத் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. ஈ.எம்.எஸ்.ஸýக்குப் பிறகு கட்சியின் தத்துவ போதகர்களில் பிரகாஷ் காரத் முன்னிலை வகித்தார் என்பதுதான் நிஜம். 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தபோதும், அதற்குப் பிறகும் கட்சியின் வெளியில் தெரிந்த முகமாக ஹர்கிஷண்சிங் சுர்ஜித் இருந்தாலும், பின்னணியில் நிழலாகச் செயல்பட்டவர் பிரகாஷ் காரத்தான்.

  1996-ல் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் நடந்த ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு வெளியில் தெரியாமலே போய்விட்டது. ஐக்கிய முன்னணி அரசில் இடதுசாரிகள் பங்கேற்பதா இல்லையா என்கிற சர்ச்சை நடந்து வந்த நேரம் அது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான இந்திரஜித் குப்தா, சதுரானன் மிஸ்ரா, பி.கே. வாசுதேவன் நாயர் போன்றவர்கள் ஆட்சியில் பங்கு பெறக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால், முற்றிலும் விபரீதமாக சி.பி.ஐ.யின் பொதுக்குழு, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானித்தது.

  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சுர்ஜித், ஈ.கே. நாயனார் மற்றும் ஜோதிபாசு போன்றவர்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று விழைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி சம்மதித்திருந்தால் ஜோதிபாசு ஒருவேளை பிரதமராகக்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஒரு கம்யூனிஸ்ட்டின் தலைமையிலான கூட்டணி அரசு இந்தியாவில் பதவி ஏற்றிருக்கும்.

  ஆனால், தலைவர்களின் விருப்பத்திற்கு விரோதமாக, மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ', ஆட்சியில் பங்கு கொள்ளக் கூடாது என்று அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து முன்னணியில் இருந்தவர் பிரகாஷ் காரத் தான். அதற்கு அவர் கூறிய காரணம்: ""நமது கொள்கைகளையும் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, பதவிக்காக ஒவ்வொரு கட்டத்திலும் நமது கொள்கைகளைச் சமரசம் செய்து கொள்கிற விதத்தில் அமையும் ஆட்சியும் அதிகாரமும் நமது இயக்கத்தைப் பலமிழக்கச் செய்துவிடும். நாம் கேலிப்பொருளாகி விடுவோம்'' என்பதுதான்.

  "நாம் செய்த சரித்திரத் தவறு' என்று ஜோதிபாசுவால் விமர்சிக்கப்பட்ட அந்த முடிவுக்குக் காரணமான பிரகாஷ் காரத், அப்போதும் இப்போதும் ஒரு விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார். மாற்றங்களுக்கு வழிகாட்டும் நிலையில்தான் இடதுசாரிகள் இருக்கிறார்களே தவிர, மாற்றத்தை முன்னின்று வழிநடத்தும் எண்ணிக்கை பலம் பெற்றவர்களாக இல்லை என்பதுதான் அது.

    தில்லி கோல்மார்க்கெட் பகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனின் மூன்றாவது மாடியிலுள்ள ஓர் ஒதுக்குப்புறமான அறையில் அமர்ந்து மூன்றாவது முன்னணி பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாரா காரத் என்றால் அதுதான் இல்லை. இந்தியா முழுவதும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார். இப்போது அவரது கவலை எல்லாம் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பது மட்டுமே. ஏனைய மூன்றாவது அணித் தலைவர்களைப் போல, தான் பிரதமராக வேண்டும் என்பதல்ல!

  பிரகாஷ் காரத்தின் மனைவி பிருந்தா காரத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். இருவருமே மாணவர் இயக்கத்திலிருந்து உயர்ந்தவர்கள். அவர் இப்போது மாநிலங்களவை உறுப்பினரும்கூட. 1975-ல் பிரகாஷ் காரத்தும் பிருந்தாவும் திருமணம் செய்து கொண்டபோது தங்களுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள். தங்களது கட்சிப் பணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா? குழந்தை பெற்றுக் கொள்வது இல்லை என்பதுதான்!   

 நன்றி திணமனி நாள் :04.05.2009